நளவெண்பா - புகழேந்திப் புலவர்
பாயிரம்
------
கடவுள் வணக்கம்
1. ஆதித் தனிக்கோல மானா னடியவற்காச்
சோதித் திருத்தூணிற் றோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே யெனவழைப்ப
என்னென்றா னெங்கட் கிறை.
அவையடக்கம்
2. வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினாற் கட்டச் சமைவதொக்கும் - பைந்தொடையில்
தேன்பாடுந் தார் நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாட லுற்ற இது.
நூல் வரலாறு
-----------
யுதிட்டிரர் வனத்தில் இருந்தது
3. பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதுந் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தா னிருந்தானை மண்ணொடும் போய் மாளப்
பொறுத்தா னிருந்தான் புலர்ந்து.
யுதிட்டிரரை மன்னர் பலர் சென்று கண்டது
4. நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ விருந்தானைக் - காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழிற்றோள் வேந்தர்
வருந்தகையா ரெல்லோரும் வந்து.
யுதிட்டிரரிடம் பிரகதசுவர் என்னும் முனிவர் வந்தது
5. கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க - முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாந் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி.
6. மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன்
பிறவிப் பெருந்துயர மெல்லாம் - அறவே
பிழைத்தேன்யா னென்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு.
7. மெய்த்திருவந் துற்றாலும் வெய்ந்துயர்வந் துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே - சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையா லுள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து.
8. அம்பொற் கயிலைக்கே யாகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா - எம்பியைமுன்
போக்கினே னென்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினே ரில்லாத மன்.
9. காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு - மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டு மன்றோ துணை.
10. பேரரசு மெங்கள் பெருந்திருவுங் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானஞ் சேர்தற்குக் - காரணந்தான்
யாதோவப் பாவென்றா னென்றுந்தன் வெண்குடைக்கீழ்
தீதோவப் பார்காத்த சேய்.
11. கேடில் விழுச்செல்வங் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண் - வாடிக்
கலங்கலைநீ யென்றுரைத்தான் காமருவு நாடற்
கிலங்கலைநூன் மார்ப னெடுத்து.
12. கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.
முனிவர் நளசரிதம் கூறுதல்
13. சேமவேன் மன்னற்குச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேற் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வைய மொருங்கிழப்பப் பண்டு
கலியால் விளைந்த கதை.
1. சுயம்வர காண்டம்
2. கலிதொடர் காண்டம்
3. கலி நீங்கு காண்டம்
0 மறுமொழிகள்:
Post a Comment