2. கலிதொடர் காண்டம்
நளன் தமயந்தியுடன் தன் நாடு சென்றமை
169. தவளத் தனிக்குடையின் வெண்ணிழலுந் தையல்
குவளைக் கருநிழலுங் கொள்ளப் - பவளக்
கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரி லேறினான் சென்று.
நளன் தமயந்திக்கு வழியில் பல காட்சிகளைக் காட்டுதல்
170. மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையப்
பொங்கி யெழுந்த பொறிவண்டு - கொங்கோடு
எதிர்கொண் டணைவனபோ லேங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண்.
171. பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்
பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.
172. மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.
173. புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.
174. கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதார மில்லா தறிந்து.
175. ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்
தோற்ற வமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணன்மே லிசைந்து.
176. அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக் - கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை யழகு.
177. கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ - கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்.
178. கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள் - வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை யுண்ட தொருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண்.
179. கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் - கெழுமியவக்
கோமகற்குத் தானினைந்த குற்றங்க ளத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல்.
180. பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல் - எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்துவக்குஞ் சேய்.
181. பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த - மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிக மென்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்.
182. சிறுக்கின்ற வாண்முகமுஞ் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையா யாம்.
183. சோர்புனலில் மூழ்கி யெழுவாள் சுடர்நுதன்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம் - பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு.
184. செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீல மென்றயிர்த்து முன்னர்க் - கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன்.
நளன் தமயந்தியுடன் பல நதி முதலியவற்றில் நீராடியது
185. காவி பொருநெடுங்கண் காதலியுங் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித் - தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி யாடி
ஒழியா துறைந்தா ருவந்து.
186. நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும் - இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரின்பத் தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில்.
தமயந்தியின் ஊடல்
187. கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை
தன்மணிவா யுள்ளே தடுமாற - மன்னவனே
இக்கடிகா நீங்க ளுறையு மிளமரக்கா
ஒக்குமதோ வென்றா ளுயிர்த்து.
188. தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதன்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக் - கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழன்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி.
189. தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் - அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவ மென்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து.
தமயந்தி புலவி தவிர்த்தது
190. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் - வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு.
ஊடல் நீங்கித் தமயந்தி நளனுடன் கூடி மகிழ்ந்தது
191. அங்கைவேல் மன்னன் அகல மெனுஞ்செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு.
நள தமயந்தியர் கங்கை கண்டது
192. வேரி மழைதுளிக்கு மேகக் கருங்கூந்தல்
காரிகையுந் தானும்போய்க் கண்ணுற்றான் - மூரித்
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறுங் கங்கைக் கரை.
அவர்கள் ஒரு பொழிலை அடைந்தது
193. சூதக் கனியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்குங் குப்பியென - மாதரார்
ஐயுற்று நோக்கு மகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன்.
நளன் தமயந்திக்குத் தன் வளநகரைக் காட்டியது
194. வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான்தோன்று மற்றின் தடம்பதிதான் - வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே யெங்கள் நகர்.
நளன் பன்னிரண்டாண்டுகள் தமயந்தியோடு மகிழ்ந்திருந்தது
195. பொய்கையும் வாசப் பொழிலு மெழிலருவச்
செய்குன்று மாறுந் திரிந்தாடித் - தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தா னடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ.
தமயந்தியின் மக்கட் பேறு
196. கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப - நூலென்னத்
தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி யிரண்டு.
கலி நளனைச் சார முடியாதிருந்தது
197. ஆண்டிரண்டா றெல்லை யளவுந் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியுங் காண்கிலான் - நீண்டபுகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு.
கலி நளனைச் சேர்ந்தது
198. சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்
தன்வயமே ஆக்குந் தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து.
199. நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரஞ் சேர்ந்தாற்போல் - பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி.
கலி புட்கரனை நளனோடு சூதாட அழைத்தது
200. நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்றேன் - மன்னவனே
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றா னெடுத்து.
புட்கரன் உடன்பட்டுக் கலியுடன் சென்றது
201. புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி யிளமேதிக் காற்குளம்பு - பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.
புட்கரன் நிடத நாடடைந்தது
202. வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறிக்
கங்கைத் திரைநீர் கரையேறிச் - செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து.
நளன் புட்கரனைக் கண்டு வினாவிய்து
203. அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி யென்னகொடி யென்ன - மிடற்சூது
வெல்லுங் கொடியென்றான் வெங்கலியா லங்கவன்மேல்
செல்லுங் கொடியோன் தெரிந்து.
நளன் புட்கரனுடன் சூதாட இசைந்தது
204. ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் - தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து.
நளனுக்கு அமைச்சர் முதலினோர் சூதின் தீமைகளை உரைத்தது
205. காதல் கவறாடல் கள்ளுண்ணல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்த லிவைகண்டாய் - போதில்
சினையாமை வைகுந் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி.
206. அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும் - மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து.
207. உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கு மோனஞ் சிதைக்கும் - மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து.
208. ஆயம் பிடித்தாரு மல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே - மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே
வடித்தாரின் றிலோர் வழக்கு.
நளனது மறுப்புரை
209. தீது வருக நலம்வருக சிந்தையால்
சூது பொரவிசைந்து சொல்லினோம் - யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று.
புட்கரனை நளன் பந்தயம் யாதென்று கேட்டது
210. நிறையிற் கவறாட நீநினைந்தா யாகில்
திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும் - துறையில்
கரும்பொடியா மள்ளர் கடவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானிப் போது.
நளன் சூதாடியதும் யாவும் தோற்றதும்
211. விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்
ஒட்டினே னுன்பணையம் ஏதென்ன - மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து.
212. காரேயுங் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயுந் தோளான் தனிமனம்போல் - நேரே
தவறாய்ப் புரண்ட தமையனொடுங் கூடிக்
கவறாய்ப் புரண்டான் கலி.
213. வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்
கொத்த பணைய முரையென்ன - வைத்தநிதி
நூறா யிரத்திரட்டி நூறுநூ றாயிரமும்
வேறாகத் தோற்றானவ் வேந்து.
214. பல்லா யிரம்பரியும் பத்துநூ றாயிரத்து
சொல்லார் மணித்தேருந் தோற்றதற்பின் - வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கு மால்யானை
பின்றோற்றுத் தோற்றான் பிடி.
215. சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான் - சூதரங்கில்
பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழல்
பூவையரைத் தோற்றான் பொருது.
216. கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்
விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்
நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்
சிறியானைச் சேர்ந்தாள் திரு.
புட்கரன் தமயந்தியைப் பந்தயமாக வைக்ககேட்டது
217. மனைக்குரியா ரன்றே வருந்துயரந் தீர்ப்பார்
சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்
குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடா
இவளைப் பணையந்தா வின்று.
நளன் சூதாட்டத்தை விட்டு நீங்கியது
218. இனிச்சூ தொழிந்தோ மினவண்டு கிண்டிக்
கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்
பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே
நாம்போது மென்றான் நளன்.
நளன் நகரைவிட்டுச் சென்றது
219. மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்
புன்காகங் கொள்ளத்தான் போனாற்போல் - தன்கால்
பொடியாடத் தேவியொடும் போயினா னன்றே
கொடியானுக் கப்பார் கொடுத்து.
220. கடப்பா ரெவரே கடுவினையை வீமன்
மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்
வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த
தனைத்தே விதியின் வ்லி.
நகரமாந்தரின் வேண்டுகோள்
221. ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே
பேரருளின் கண்ணே பெருமானே - பாரிடத்தை
யார்காக்கப் போவதுநீ யாங்கென்றார் தங்கண்ணின்
நீர்வார்த்துக் கால்கழுவா நின்று.
222. வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடுவிழந்தால் - சீலம்
ஒழிவரோ செம்மை யுரைதிறம்பாச் செய்கை
அழிவரோ செங்கோ லவர்.
223. வடியேறு கூரிலைவேன் மன்னாவோ வுன்றன்
அடியேங்கட் காதரவு தீரக் - கொடிநகரில்
இன்றிருந்து நாளை யெழுந்தருள்க வென்றுரைத்தார்
வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து.
224. மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்
நின்றுருகு வார்கண்ணி னீர்நோக்கி - இன்றிங்
கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்
வருத்தமே தன்மனத்தில் வைத்து.
புட்கரன் நளனை ஆதரிப்பார் கொல்லப்படுவார் என முரசறைவித்தது
225. வண்டாடுந் தார்நளனை மாநகரில் யாரேனும்
கொண்டாடி னார்தம்மைக் கொல்லென்று - தண்டா
முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்
கரசறியா வேந்த னழன்று.
226. அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து
பிறைநுதலாள் பேதைமையை நோக்கி - முறுவலியா
இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்
மன்னகற்றுங் கூரிலைவேன் மன்.
நளன், தமயந்தியும் மக்களும் தொடர நகர் நீங்கியது
227. தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்
பொன்வாயில் பின்னாகப் போயினான் - முன்னாளில்
பூமகளைப் பாரினொடு புல்லினான் கன்மகனைக்
கோமகளைத் தேவியொடுங் கொண்டு.
நகரின் துயர நிலை
228. கொற்றவன்பாற் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப - முற்றும்
இழவு படுமாபோ லில்லங்க டோ றும்
குழவிபா லுண்டிலவே கொண்டு.
நளனுடைய மக்களின் துயரநிலை
229. சந்தக் கழற்றா மரையுஞ் சதங்கையணி
பைந்தளிரு நோவப் பதைத்துருகி - எந்தாய்
வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்
கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து.
230. தூயதன் மக்கள் துயர்நோக்கிச் சூழ்கின்ற
மாய விதியின் வலிநோக்கி - யாதும்
தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மை
புரிவான் துயரால் புலர்ந்து.
நளன் தமயந்தியை மக்களுடன் குண்டினபுரம் ஏகக் கூறியது
231. காத லிருவரையும் கொண்டு கடுஞ்சுரம்போக்
கேத முடைத்திவரைக் கொண்டுநீ - மாதராய்
வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்
தாமம் புனைந்தாளைத் தான்.
தமயந்தியின் மறுமொழி
232. குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்
பெற்றுக் கொளலாம் பெறலாமோ - கொற்றவனே
கோக்கா தலனைக் குலமகளுக் கென்றுரைத்தாள்
நோக்கான் மழைபொழியா நொந்து.
நளன் மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறியது
233. கைதவந்தான் நீக்கிக் கருத்திற் கறையகற்றிச்
செய்தவந்தா னெத்தனையுஞ் செய்தாலும் - மைதீர்
மகப்பெறா மானிடர்கள் வானவர்தம் மூர்க்குப்
புகப்பெறார் மாதராய் போந்து.
234. பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்.
235. சொன்ன கலையின் துறையனைத்துந் தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தா மின்முகத்து - முன்னம்
குறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்
சிறுகுதலை கேளாச் செவி.
தமயந்தி நளனைத் தன் தந்தை நகருக்கு வருமாறு அழைத்தது
236. போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்
தோற்றமையும் யாவர்க்குந் தோற்றாதே - ஆற்றலாய்
எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்
செம்பதிக்கே வீற்றிருந்த தேன்.
நளன் அதற்கு உடன்படாது உரைத்தது
237. சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய் - தனக்குரிய
தானந் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து
மானந் துடைப்பதோர் வாள்.
238. மன்னராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி
இன்னமுதந் தேக்கி யிருப்பரேல் - சொன்ன
பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ
வரும்பேடை மானே யவர்.
தமயந்தி மக்களையேனும் தன் தந்தையிடம் அனுப்ப வேண்டிக்கொண்டது
239. செங்கோலா யுன்றன் திருவுள்ளம் ஈதாயின்
எங்கோன் விதர்ப்ப னெழினகர்க்கே - நங்கோலக்
காதலரைப் போக்கி யருளென்றாள் காதலருக்
கேதிலரைப் போல வெடுத்து.
நளன் தன் மக்களை அனுப்ப உடன்பட்டது
240. பேதை பிரியப் பிரியாத பேரன்பின்
காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன் - தாதைக்குக்
காட்டுநீ யென்றான் கலங்காத வுள்ளத்தை
வாட்டுநீர் கண்ணிலே வைத்து.
மக்களின் பிரிவாற்றாத் துயரநிலை
241. தந்தை திருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள்
இந்து முகத்தை யெதிர்நோக்கி - எந்தம்மை
வேறாகப் போக்குதிரோ வென்றார் விழிவழியே
ஆறாகக் கண்ணீ ரழுது.
242. அஞ்சனந்தோய் கண்ணி லருவிநீ ராங்கவர்க்கு
மஞ்சனநீ ராக வழிந்தோட - நெஞ்சுருகி
வல்லிவிடா மெல்லிடையாண் மக்களைத்தன் மார்போடும்
புல்லிவிடா நின்றாள் புலர்ந்து.
மக்களை ஒரு மறையோன் அழைத்துச் சென்றது
243. இருவ ருயிரு மிருகையான் வாங்கி
ஒருவன்கொண் டேகுவா னொத்து - அருமறையோன்
கோமைந்த னோடிளைய கோதையைக்கொண் டேகினான்
வீமன் நகர்க்கே விரைந்து.
244. காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை யெனநின் றுயிர்ப்போட - யாதும்
உரையாடா துள்ள மொடுங்கினான் வண்டு
விரையாடுந் தாரான் மெலிந்து.
நளதமயந்தியர் ஒரு பாலைநிலத்தைக் கண்ணுற்றது
245. சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்
காலிற்போய்க் தேவியொடுங் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்
கள்ளிவே கத்தரவுங் கண்மணிகள் தாம்பொடியாய்த்
துள்ளிவே கின்ற சுரம்.
கலி ஒரு பொற்புள்ளாய் அங்கு தோன்றியது
246. கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்
பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கே
அஞ்சிப்பா ரீந்த அரசனையுந் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து.
அப்பொற்புள்ளைத் தமயந்தி விரும்பியது
247. தேன்பிடிக்குந் தண்துழாய்ச் செங்கட் கருமுகிலை
மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல் - தான்பிடிக்கப்
பொற்புள்ளைப் பற்றித்தா வென்றாள் புதுமழலைச்
சொற்கிள்ளை வாயாள் தொழுது.
நளன் அப்பறவைஅயிப் பிடிக்க முயலுதல்
248. பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்
கைக்குள்வரு மாபோற் கழன்றோடி எய்க்கும்
இளைக்குமா போல இருந்ததுகண் டன்றே
வளைக்குமா றெண்ணினான் மன்.
249. கொற்றக் கயற்கட் கொடியே யிருவோரும்
ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்த
பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்
பற்றகலா வுள்ளம் பரிந்து.
நளன் தன் ஆடையால் புள் வளைத்தது
250. எற்றித் திரைபொரநொந் தேறி யிளமணலில்
பற்றிப் பவழம் படர்நிழற்கீழ் - முத்தீன்று
வெள்வளைத்தா யோடுநீர் வேலைத் திருநாடன்
புள்வளைத்தா னாடையாற் போந்து.
அப்புள் வானில் அவ்வாடையுடன் எழுந்து கூறியது
251. கூந்த லிளங்குயிலுங் கோமானுங் கொண்டணைத்த
பூந்துகில்கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனே
நன்னாடு தோற்பித்தோண் நானேகா ணென்றதே
பொன்னாடு மாநிறத்த புள்.
நளதமயந்தியர் இருவரும் ஓராடையே கொண்டமை
252. காவிபோற் கண்ணிக்குங் கண்ணியந்தோட் காளைக்கும்
ஆவிபோ லாடையுமொன் றானதே - பூவிரியக்
கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்
புள்வேட்டை யாதரித்த போது.
தமயந்தி கலியைச் சபித்தது
253. அறம்பிழைத்தார் பொய்த்தா ரருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வ மிகழ்ந்தார் - புறங்கடையில்
சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொ லென்றழியா
நின்றாள் விதியை நினைந்து.
தமயந்தி, தாம் அவ்விடம்விட்டு நீங்க விரும்பியது
254. வையந் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே
சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்
போந்தருளு கென்றாள் புலந்து.
சூரியாத்தமயம்
255. அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்
வெந்தழலை யாற்றுவான் மேற்கடற்கே - எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளால் பாரை
ஒளிப்பான்போற் பொற்றே ருடன்.
நளதமயந்தியர் இருளூடே கானிற் சென்றது
256. பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்
கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்குந் தோன்றா விருள்.
ஒரு பாழ்மண்டபம் அடைந்தது
257. எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள்வழிபோய்
வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்
பாழ்மண் டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண் டபங்கண்டான் வந்து.
258. மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாரு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்
மாதராய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்
போதரா யென்றான் புலர்ந்து.
தமயந்தியின் துயரநிலை
259. வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.
நளன் தமயந்தியைத் தேற்றியது
260. பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்
கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டை
வழியனீ ரென்றான் மனநடுங்கி வெய்துற்
றழியனீ யென்றா னரசு.
மீண்டும் தமயந்தி வருந்தியது
261. விரைமலர்ப்பூ மெல்லணையு மெய்காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான்
காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப்
பூணேர் முலையாள் புலர்ந்து.
நளன் தமயந்தியைக் கண்ணுறங்குமாறு கூறியது
262. தீய வனமுந் துயின்று திசைஎட்டுமேதுயின்று
பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக்
கண்மேற் துயில்கை கடனென்றான் கைகொடுத்து
மண்மேற் றிருமேனி வைத்து.
நளனது துயரம்
263. புன்கண்கூர் யாமத்துப் பூழிமேற் றான்படுத்துத்
தன்கண் துயில்வாளைத் தான்கண்டும் - என்கண்
பொடியாதா லுள்ளாவி போகாதால் நெஞ்சம்
வெடியாதா லென்றான் விழுந்து.
தமயந்தியின் துயரம்
264. முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.
மீண்டும் நளனது துயரம்
265. வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத்
தாம மெனக்களித்த தையலாள் - யாமத்துப்
பாரே யணையாப் படைக்கண் துயின்றாள்மற்
றாரோ துயரடையா ராங்கு.
கலி நளன் மன உறுதியைக் கலைத்தது
266. பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத
செம்மை யுடைமனத்தான் செங்கோலான் - பொய்ம்மை
விலக்கினா னெஞ்சத்தை வேறாக்கி நின்று
கலக்கினான் வஞ்சக் கலி.
267. வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்கும்
செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் - விஞ்ச
மதித்ததேர்த் தானை வயவேந்த னெஞ்சத்
துதித்ததே வேறோ ருணர்வு.
268. காரிகைதன் வெந்துயரங் காணாமல் நீத்தந்தக்
கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே
இருவர்க்கு மோருயிர்போ லெய்தியதோ ராடை
அரிதற் கவனினைந்தா னாங்கு.
269. எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன்
கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக்
கேளான தேமொழியை நீக்கக் கிளரொளிசேர்
வாளாய் மருங்கிருந்தான் வந்து.
நளன் அடையை அரிந்தது
270. ஒற்றைத் துகிலு முயிரு மிரண்டாக
முற்றுந்தன் னன்பை முதலோடும் - பற்றி
அரிந்தா னரிந்திட் டவள்நிலைமை நெஞ்சில்
தெரிந்தா னிருந்தான் திகைத்து.
நளனது பிரிவுத்துயர்
271. போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல்
கடைவார்தங் கைபோல் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்.
272. சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த
மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த
ஒளித்ததேர்த் தானை யுயர்வேந்த னெஞ்சம்
வலித்ததே தீக்கலியால் வந்து.
273. தீக்கா னகத்துறையுந் தெய்வங்காள்! வீமன்தன்
கோக்கா தலியைக் குறிக்கொண்மின் - நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின்
றேதிலன்போற் போகின்றேன் யான்.
நளன் தமயந்தியை நீத்துச் சென்றது
274. ஏந்து மிளமுலையா ளின்னுயிருந் தன்னருளும்
பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்
தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை
இடையிருளிற் கானகத்தே யிட்டு.
275. தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளிற்
செங்கா னகஞ்சிதையத் தேவியைவிட் டேகினான்
வெங்கா னகந்தனிலே வேந்து.
தமயந்தி விழித்துக்கொண்டு நளனைக் காணாது வருந்தியது
276. நீல மளவே நெகிழ நிரைமுத்தின்
கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே
எங்குற்ற யென்னா இனவளைக்கை நீட்டினாள்
அங்குத்தான் காணா தயர்ந்து.
277. வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்
கையரிகொண் டெவ்விடத்துங் காணாமல் - ஐயகோ
என்னப்போய் வீழ்ந்தா ளினமேதி மென்கரும்பைத்
தின்னப்போம் நாடன் திரு.
278. அழல்வெஞ் சிலைவேட னம்புருவ ஆற்றா
துழலுங் களிமயில்போ லோடிக் - குழல்வண்
டெழுந்தோட வீழ்ந்தா ளிருகுழைமேற் கண்ணீர்க்
கொழுந்தோட வீமன் கொடி.
279. வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்
தானுங் குழலுந் தனிவீழ்ந்தாள் - ஏனம்
குளம்பான் மணிகிளைக்குங் குண்டுநீர் நாடன்
இளம்பாவை கைதலைமே லிட்டு.
பொழுது புலர்ந்தமை
280. தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம்.
சூரியோதயம்
281. வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்
தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறி
காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானூடே
நீட்டுவான் செங்கரத்தை நின்று.
தமயந்தி நளன் அடிச்சுவடு கண்டு வருந்தியது
282. அல்லியந்தார் மார்ப னடித்தா மரையவள்தன்
நல்லுயிரு மாசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்
வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலை
சார்ந்தநீர் வெள்ளத்தே தான்.
தமயந்தி, மயில் முதலியவற்றை நோக்கி 'நளன் சென்ற வழி காட்டீர்' எனக் கூறியது
283. வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்த
நெறிக்கண் நடிதூழி வாழ்வீர் - பிறித்தெம்மைப்
போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்
வானாடர் பெற்றிலா மான்.
ஒரு பாம்பு தமயந்தியைப்பற்றி விழுங்கலுற்றது
284. வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியால்
மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனை
ஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்
போரார் விழியாள் புலர்ந்து.
285. அங்கண் விசும்பி னவிர்மதிமேற் சென்றடையும்
வெங்க ணரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு
மேலெல்லாந் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாந் தீயுமிழும் பாம்பு.
தமயந்தி நளன் உதவிநாடி அழுதது
286. வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்
தாளடைந்து வாழுந் தமியேனைத் - தோளால்
விலக்காயோ வென்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்
கிலக்காகி நின்றா ளெடுத்து.
287. வென்றிச் சினவரவின் வெவ்வா யிடைப்பட்டு
வன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுன்
திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே யென்றாள்
பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து.
தமயந்தி தன் மக்களை நினைத்து வருந்தியது
288. மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன்
பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனை
நீரேனுங் காண்குதிரே என்றழுதாள் நீள்குழற்குக்
காரேனு மொவ்வாள் கலுழ்ந்து.
தமயந்தி தன் உயிர் நீங்கு நிலையில் நளனை நினைந்து வணங்கிக் கூறியது
289. அடையுங் கடுங்கானி லாடரவின் வாய்ப்பட்
டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத்
தந்தருள்வா யென்னாத்தன் தாமரைக்கை கூப்பினாள்
செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து.
ஒரு வேடன் அங்கு வந்தது
290. உண்டோ ரழுகுரலென் றொற்றி வருகின்ற
வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான்
கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்
முழுகுவாள் தெய்வ முகம்.
தமயந்தி அவ்வேடனை வேண்டிக் கொண்டது
291. வெய்ய அரவின் விடவாயி னுட்பட்டேன்
ஐயன்மீ ருங்கட் கபயம்யா - னுய்ய
அருளீரோ என்னா அரற்றினா ளஞ்சி
இருளீரும் பூணா ளெடுத்து.
வேடன் தமயந்தியைப் பாம்பின் வயினின்று மீட்டது
292. சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி
வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் - மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த
காம்பின்வாய் வில்வேடன் கண்டு.
தமயந்தி வேடன் உதவிக்கு நன்றி கூறியது
293. ஆருயிரும் நானு மழியாமல் ஐயாவிப்
பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில்
இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றி
விதர்ப்பன்றான் பெற்ற விளக்கு.
வேடன் தமயந்தியை விரும்பித் தன்னுடன் வர அழைத்தது
294. இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன்
சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீ
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றா னெடுத்து.
தமயந்தி வேடனிடம் தப்பி ஓட முயன்றது
295. வேட னழைப்ப விழிபதைத்து வெய்துயிரா
ஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள்
தூறெலா மாகச் சுரிகுழல்வேற் கண்ணினீர்
ஆறெல்லா மாக வழுது.
தமயந்தி சீறிவிழிக்க வேடன் எரிந்து நீறானது
296. தீக்கட் புலிதொடரச் செல்லுஞ் சிறுமான்போல்
ஆக்கை தளர வலமந்து - போக்கற்றுச்
சீறா விழித்தாள் சிலைவேட னவ்வளவில்
நீறாய் விழுந்தா னிலத்து.
தமயந்தியை ஒரு வணிகன் கண்டு வினாவியது
297. அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன்
இவ்வளவு தீவினையே னென்பாள்தன் - மெய்வடிவைக்
கண்டானை யுற்றான் கமலமயி லேயென்றான்
உண்டாய தெல்லா முணர்ந்து.
298. எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னூர் யாதுன்பேர்
நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய்
கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்
விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து.
299. முன்னை வினையின் வலியால் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்
காணா தழுகின்றே னென்றாள் கதிரிமைக்கும்
பூணாரம் பூண்டாள் புலர்ந்து.
வணிகன் தமயந்தியைச் சேதி நகரில் விட்டுச் சென்றது
300. சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டப்
போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி
கிடத்துவான் மன்னவர்தங் கீர்த்தியினைப் பார்மேல்
நடத்துவான் வட்டை நடந்து.
தமயந்தியைக் கண்ட பணிப்பெண்கள் சேதியரசன் தேவிக்கு அறிவித்தது
301. அற்ற துகிலு மறாதொழுகு கண்ணீரும்
உற்ற துயரு முடையவளாய் - மற்றொருத்தி
நின்றாளைக் கண்டோ ம் நிலவேந்தன் பொற்றேவி
என்றார் மடவா ரெடுத்து.
சேதிராசன் தேவி தமயந்தியை அழைத்து வரச் செய்தது
302. போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை
ஆய மயிலை யறியவே - நீயேகிக்
கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கனிதிறந்து
வண்டுவாழ் கூந்தன் மயில்.
சேதியரசன் தேவி தமயந்தியை வினாவியது
303. அந்தா மரையி லவளேயென் றையுற்றுச்
சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே
உள்ளவா றெல்லா முரையென்றா ளொண்மலரின்
கள்ளவார் கூந்தலாள் கண்டு.
தமயந்தியின் மறுமொழி
304. என்னைத் தனிவனத்திட் டென்கோன் பிரிந்தேக
அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே
வந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச்
செந்தேன் மொழிபதறாத் தேர்ந்து.
தமயந்தி அரண்மனையில் தங்கியிருந்தது
305. உன்றலைவன் தன்னை யொருவகையால் நாடியே
தந்து விடுமளவுந் தாழ்குழலாய் - என்றனுடன்
இங்கே யிருக்க இனிதென்றா ளேந்திழையைக்
கொங்கேயுந் தாராள் குறித்து.
வீமராசன் நளனையும் தமயந்தியையும் தேடிவர ஒரு மறையவனை ஏவியது
306. ஈங்கிவளிவ் வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்
பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாங்குற்றார்
சென்றுணர்தி யென்று செலவிட்டான் வேதியனைக்
குன்றுறழ்தோள் வீமன் குறித்து.
மறையோன் சேதிநாடு சென்று தமயந்தியைக் கண்டது
307. ஓடும் புரவித்தேர் வெய்யோ னொளிசென்று
நாடு மிடமெல்லாம் நாடிப்போய்க் - கூடினான்
போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாம்
சேதித் திருநாடு சென்று.
308. தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளை
ஆமென் றறியா அருமறையோன் - வீமன்
கொடிமேல் விழுந்தழுதான் கொம்புமவன் செம்பொன்
அடிமேல் விழுந்தா ளழுது.
மறையோன் சேதியரசியிடம் தமயந்தியின் நிலை அறிவித்ததும் அவள் துயரும்
309. மாரி பொருகூந்தன் மாதராய் நீபயந்த
காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும்
வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக்
காணியாய் நின்றா ளயர்ந்து.
310. தன்மக ளாவ தறியாத் தடுமாறாப்
பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக்
கோதிப்போய் மேதி குருகெழுப்புந் தண்பணைசூழ்
சேதிக்கோன் தேவி திகைத்து.
சேதிராசன் தமயந்தியை அவள் தந்தை நகருக்கு அனுப்பியது
311. கந்தனையுங் கன்னியையுங் கண்டாயி னுஞ்சிறிது
தன்துயரந் தீர்ந்து தனியாறத் - தந்தை
பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு.
தமயந்தியைக் கண்ட குண்டினபுர மக்களின் துயரம்
312. கோயிலு மந்தப் புரமும் கொடிநுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும்
கானாள மக்களையுங் கைவிட்டுக் காதலன்பின்
போனாள் புகுந்த பொழுது.
313. அழுவார் விழுவா உயிர்ப்பார்
தொழுவார் தமரெங்குஞ் சூழ்வார் - வழுவாக்
காமநீ ரோதக் கடல்கிளர்ந்தால் ஒத்தவே
நாமவேல் வீமன் நகர்.
314, தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச்
சிந்தை கலங்கித் திகைத்தலமந் - தெந்தாயான்
பட்டதே யென்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்
விட்டநீர் மேலே விழ.
தமயந்தியைக் கண்ட தாய்தந்தையரும் சுற்றத்தாரும் கொண்ட துயர்
315. செவ்வண்ண வாயாளுந் தேர்வேந் தனுமகளை
அவ்வண்ணங் கண்டக்கா லாற்றுவரோ - மெய்வண்ணம்
ஓய்ந்துநா நீர்போ யுலர்கின்ற தொத்ததமர்
நீந்தினார் கண்ணீரி னின்று.
316. பனியிருளிற் பாழ்மண் டபத்திலே யுன்னை
நினையாது நீத்தகன்ற போது - தனியேநின்
றென்னினைந்து என்செய்தா யென்னாப் புலம்பினாள்
பொனினைத்தாய் நோக்கிப் புலர்ந்து.
0 மறுமொழிகள்:
Post a Comment